Tuesday, November 15, 2011

சிலந்தியும் நாமும்! விழு, எழு!


பாட்டெதற்குப் பாடியே பரமனவர் பட்டதனை
பாவிநான் மறக்கலாமோ
போட்டுடைத்து ஆடிப்பெரும் பூமியில் புயலடிக்க
பூமலர்கள் தூவலாமோ
ஏட்டெதற்கு என்றெழுதி இதயம் கனத்துவிட
இன்னுமே எழுதலாமோ
நீட்டியொரு பாய்விரித்து நிமிர்ந்து படுத்துமனம்
நிம்மதியைக் காணுமாமோ
நாடெதற்கு நாயுடனே நரிகள் அரசுகொள்ள
நானெதற்கு என்னலாமோ
வீடெதற்கு என்றவனோ விறகாய் கொழுத்திவிட
விட்டுமோடிச் செல்லலாமோ
ஆடெதற்கு என்றவரும் அறுத்துக் கறிசமைக்க
ஆகா ருசி என்னலாமோ
வேடமிட்டு சூழ்ந்துவந்து வேதனை விளைப்பவனை
வேடிக்கையென் றெண்ணலாமோ
தோலுரித்து வெயிலில் துடிக்க விரிப்பவனைத்
தோழனென்று கொள்ளலாமோ
நாலுபேரைத் தூக்கவிட்டு நடுவில் படுக்கவைக்க
நாமும்சரி என்னலாமோ
வாலிருக்க தீயைவைத்து வந்திருந்த தூதனையும்
விட்டுவைத்த தீதுயாரோ
காலிருக்க ஒடியவன் கனத்த அனல்எரித்துக்
கண்டநிலம் தீயுதாமோ
வேலிருக்க என்னபயம் வென்றுவிடு என்றவனும்
வீதியிலே நிற்கலாமோ
கோலிருக்கு ஆளுங்குடை கொண்டிருக்கு என்றவுடன்
கோவிலும் பறிக்கலாமோ
ஆலிருக்கு அரச மரமிருக்கு என்றவுடன்
அந்த இடம் புத்தமாமோ
வேலிருக்கு வேம்புடனே வேங்கையும் பரந்திருந்தால்
விட்டுஓடிச் செல்லுவாரோ
கூழிருக்கு சோறுகஞ்சி குடித்துப் படுத்தமண்ணை
கூலிபெற்று விற்கலாமோ
தோழிருக்கு மீசைஇன்னும் துடித்து உணர்விருக்க
தோல்விஎன்று சொல்லலாமோ
ஆளிருத்தி வாழ்வழித்து அவலமிடப் பொறுத்து
ஆக இன்னும் தூங்கலாமோ
நாளிருக்கு நமக்கில்லை நாமிருப்ப தூரமென
நாஒறுக்க ஊமையாமோ
ஏழிருக்கு ஏழரையில் ஏறியேசனியிருக்க
எல்லாம்விதி என்பதாமோ
ஊழிருக்கு செய்தவினை உற்றழியகாலமிது
ஒன்றும்பயன் இல்லையென்பதோ
நூலுடன் சிலந்திவலை நாலுதரம் வீழ்ந்தெழுந்து
நெய்தகதை நீபடித்தையோ
போலிருக்கு பூமிதனில் புன்மைதரும்வாழ்வு நீயும்
போயெழுந்து தீரம் கொள்வையோ

No comments:

Post a Comment