Tuesday, November 15, 2011

அந்த வாழ்க்கை

முளை கட்டிய விதை மண்ணில் விழுந்து
மஞ்சள் முளையாகி, மண்ணை நிறைத்து
பச்சை நிறமெடுத்து பச்சை ஆடை கட்டிட
நிலமகளும், நலமுடனே நிறம் காட்டிட
துள்ளித் திரிந்த அந்த நாட்கள்...

வாயக்கால் தண்ணீரில் காகிதப் படகு விட்டு
காலாலே தண்ணீர் அடித்து விளையாடி,
மாமரத்து அணில் போட்ட, மாங்காய் கடித்து
மாலை வெய்யில் மஞ்சள் நிறம் ரசித்து,
நாளை விடியலுக்கு காத்திருந்த அந்த நாட்கள்...

குளத்து நீரில் ஓடி ஆடி விளையாடிக் குளித்து,
களத்து மேட்டில் ஆட்டம் போட்டு,
நினைத்ததைச் செய்து, நிம்மதி கண்ட
அந்த நாட்கள் என்று வருமோ ?

வண்ணக் கனவுகளில் எண்ணம் மறந்து,
சின்னக் குழந்தைகளாய் ஆடிக் கழித்த
அந்த வாழ்க்கை இனி வருமா?

No comments:

Post a Comment